தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

கழிவுநீர் செல்ல வடிகால் வேண்டும்

அரியலூர் மாவட்டம், வெற்றியூர் ஊராட்சி திருப்பெயர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து நடுநிலை பள்ளி வரை சாலையின் இருபுறங்களில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அங்குள்ள கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வெற்றியூர்.

மருதையாற்றின் கரைகளை உயர்த்த கோரிக்கை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், முத்துவாஞ்சேரி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மருதையாறு சந்திக்கும் இடத்தில் தண்ணீர் வெளியேறி விளை நிலங்களை சேதப்படுத்தி விடுகிறது. எனவே இரண்டு ஆறுகளும் சந்திக்கும் இடத்தில் உள்ள மருதையாற்று கரைகளை உயர்த்தி, பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், முத்துவாஞ்சேரி.

போக்குவரத்து நெரிசல்

அரியலூர் மார்க்கெட் பகுதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு ஏராளமான பொருட்களை வைத்து ஆக்கிரமித்து செய்துள்ளனர். மேலும் கடைகளின் முன்பு ஆங்காங்கே ஏராளமான சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாலையை மறைத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிேறாம்.

பொதுமக்கள், தாமரைக்குளம்.

நாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் சாலைகளில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.

குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் ஆதிதிராவிட மக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவு அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.


Next Story