'தினத்தந்தி' செய்தி எதிரொலி: ஆபத்தான அரசு பள்ளி இடித்து அகற்றம்

ஆபத்தாக காணப்பட்ட சின்னேரிபாளையம் அரசு பள்ளி கட்டிடம் ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் இடித்து அகற்றப்பட்டது.
நெகமம்
ஆபத்தாக காணப்பட்ட சின்னேரிபாளையம் அரசு பள்ளி கட்டிடம் 'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் இடித்து அகற்றப்பட்டது.
அச்சத்தில் மாணவர்கள்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், நெகமம் பேரூராட்சி பகுதியில் சின்னேரிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு வகுப்பறைகள் உள்ளன. இங்கு 20 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் என இரண்டு பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2009-ம் ஆண்டு பள்ளியில் கான்கிரீட் கட்டிடம் கட்டப்பட்டது. கட்டிடம் கட்டப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் கட்டிடத்தின் மேற்பகுதியில் மழைநீர் தேங்கி, பக்கவாட்டில் சுவர்கள் வழியாக அனைத்து இடங்களிலும் நீர் கசிவு ஏற்படுகிறது. இதனால் ஜன்னல் கம்பிகள், கதவுகள், கரும்பலகை, மாணவர்கள், ஆசிரியர்கள் அமரும் இருக்கைகள், மேசைகள் மற்றும் தளவாட பொருட்கள், தரைப்பகுதி ஆகியவை சேதமடைந்து, எப்போ இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மாணவர்கள் இருந்தனர்.
இடித்து அகற்றம்
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் மட்டும் ஆன்லைனில் வகுப்பு நடத்தி வந்தனர். தற்போது பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பள்ளியில் தண்ணீர் புகுந்து அனைத்து இடங்களிலும் சேதமடைந்ததுடன் பொருட்கள் நாசமாகின. மேலும் பள்ளி மேற்கூைரயில் சிமெண்டு கற்கள் பெயர்ந்து அடிக்கடி கீழே விழுந்தது. இதனால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்க அச்சப்பட்டனர். இது குறித்து பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் நலன் கருதி பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், ஒன்றிய கல்வி அதிகாரி ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தனர். ஆனால் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுபற்றிய செய்தி சில மாதங்களுக்கு முன் தினத்தந்தி நாளிதழில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளியில் ஆபத்தாக காணப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது.
பொதுமக்கள் நன்றி
தற்போது மாணவர்கள் மாற்று இடத்தில்வைத்து பாடம் கற்று வருகிறார்கள். அதன்படி அந்தப்பகுதியில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தினார். விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அங்கு பள்ளி செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கு பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






