உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம்


உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம்
x

உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர்

உலக சாதனைக்காக உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது.

கும்மியாட்டம்

தமிழகத்தின் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கும்மியாட்டக்கலை தற்போது கோவில் திருவிழாக்கள், பாரம்பரிய ஆர்வலர்களால் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் மறுமலர்ச்சி பெற்று வருகிறது.

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தந்து நோய் நொடி இல்லாத நீண்ட வாழ்வை அளிக்கக்கூடிய ஆடல் பாடலுடன் கூடிய பழமை வாய்ந்த இந்த கும்மியாட்ட கலை மேற்கு மண்டல மாவட்ட மக்களால் பரவலாக பாடப்பட்டு வந்த நிலையில் நாளடைவில் மெல்ல மெல்ல மக்களிடம் இருந்து மறையத்தொடங்கியது.

இந்த நிலையில் அழிந்து வரும் கும்மியாட்டக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பவளக்கொடி கும்மியாட்ட கலை பயிற்சியை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர்.

உலக சாதனை நிகழ்வு

அந்த வகையில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்ற நிகழ்வாக 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பவளக்கொடி கும்மியாட்டம் நேற்று முன்தினம் இரவு உடுமலை அடுத்த மலையாண்டிகவுண்டனூர் கிராமத்தில் மின்னொளியில் நடைபெற்றது.

உலக சாதனை நிகழ்வு, 50-வது பொன்விழா அரங்கேற்றம், கும்மியாட்ட நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழாவாக ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இதை கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி நிறுவனர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து உலக சாதனை அதிகாரிகள் முன்னிலையில் கும்மியாட்டம் தொடங்கியது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உற்சாகத்தோடு கலந்துகொண்டு நாட்டுப்புறப்பாடல், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்களை பாடியவாறு நான்கு மணி நேரம் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ஆட்டத்தை மெய்சிலிர்க்கும் வகையில் அரங்கேற்றினார்கள்.

ரசித்த பொதுமக்கள்

காலில் சலங்கை கட்டி பாடலுக்கு ஏற்றவாறு அனைவரும் ஒருசேர ஒன்று கூடி ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் பார்த்து ரசித்ததோடு தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டும் மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார், உடுமலை நகரச்செயலாளர் சி. வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.மெய்ஞானமூர்த்தி, ஈஸ்வரசாமி, செந்தில்குமார், உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், எஸ்.எம்.டிராவல்ஸ் உரிமையாளர் நாகராஜ், சத்யம் பிரிண்டர்ஸ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story