தசரா பண்டிகை: குலசேகரப்பட்டினம் செல்ல 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்


தசரா பண்டிகை: குலசேகரப்பட்டினம் செல்ல 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
x

குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாட்கள் திருவிழா நடைபெற இருக்கிறது.

தசரா திருவிழாவையொட்டி விரதம் மேற்கொண்டு பல்வேறு வேடம் அணியும் பக்தர்கள் குழுக்களாகவும், தனித்தனியாகவும் காணிக்கை வசூல் செய்து கோவிலில் படைப்பர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி நடந்த தசரா திருவிழாவில் இந்த ஆண்டு லட்சகணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, 4 நாட்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

குலசேகரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வரும் 1.10.2022 முதல் 04.10.2022 வரை சென்னையில் இருந்து திருச்செந்தூர் குலசேகரப் பட்டினத்திற்கும் மற்றும் கோவையில் இருந்து திருச்செந்தூர் குலசேகரப் பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக 06.10.2022 முதல் 10.10.2022 வரை கூடுதல் பஸ்கள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகப் பஸ்களில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பஸ் வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story