மூன்று கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


மூன்று கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

இத்திட்டத்தின்கீழ், பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.01.2024) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இறையருள் பெறத் திருக்கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 8 திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 756 திருக்கோவில்களில் மதியவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுமார் 82,000 பக்தர்கள் பயன்பெறுவதோடு, இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் 105 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமானது ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆகிய 2 திருக்கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றபின், அத்திட்டத்தினை விரிவுப்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 16.09.2021 அன்று திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களிலும், கடந்த 31.12.2022 அன்று இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

2023-24 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், "நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் எட்டு திருக்கோவில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது விரிவுபடுத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் ஆகிய மூன்று திருக்கோவில்களில் நடைமுறைப்படுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இம்மூன்று திருக்கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும்.

திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழை (BHOG) 523 திருக்கோவில்கள் பெற்று, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story