நபா தாஸின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


நபா தாஸின் மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸ். இவர் புதிதாக கட்டப்பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் அலுவலகம் திறக்க இன்று ஜஹர்சுஹுடா மாவட்டம் பிரஜாராஜ்நகரின் காந்தி சவுக் பகுதிக்கு வந்தார். அப்போது, மந்திரி நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

உதவி சப்-இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார் மந்திரி நபா தாஸ். அவரை மீட்ட அவரது ஆதரவாளர்கள் காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மந்திரி நபா தாஸ் புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மந்திரி நபா தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி பிரதமர் மோடி, ஒடிசா முதல் மந்திரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மந்திரி நபா தாஸின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒடிசாவின் சுகாதாரத்துறை மந்திரி நபா தாஸின் துரதிர்ஷ்டவசமான மரணம், ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஒடிசா முதல் மந்திரி ஆகியோருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story