மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் - வெள்ளையன் பங்கேற்பு


மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் - வெள்ளையன் பங்கேற்பு
x

மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.

சென்னை

திருவொற்றியூர்,

திருவொற்றியூர்- மணலி இடையே போக்குவரத்துக்காக பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் கட்டுமான பணி 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த பணிகள் மந்தகதியில் நடைபெற்று தற்போது வரை முடிவடையாமல் உள்ளது. இதனால் திருவொற்றியூரில் இருந்து மணலி வழியாக மாதவரம், பால்பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் சுமார் 8 கி.மீ. தூரம் சுற்றிச்செல்ல வேண்டியது உள்ளது. இதனால் நேரமும், பணமும் விரையமாவதுடன், கனரக வாகனங்கள், கார், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்கள் சர்வீஸ் சாலையில் செல்வதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

எனவே இந்த மேம்பாலத்தை விரைவாக கட்டிமுடிக்க வலியுறுத்தி மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்கம் சார்பில் மணலி மார்க்கெட் அருகில் சங்க தலைவர் டி.ஏ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் பூபாலகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, "இந்த மேம்பால பணியை விரைவில் முடிக்காவிட்டால் வணிகர்கள் சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

இதில் செயலாளர் சவுந்தர்ராஜன் மற்றும் வியாபாரி சங்க நிர்வாகிகள் வே.ராமசாமி, தங்ககுமார், தேவராஜ், சுகுமார், வியாசைமணி, மாத்தூர் அந்தோணி மற்றும் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கோகுல் உள்பட ஏராளமான வியாபாரிகள், பொதுநல சங்கத்தினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் பொருளாளர் நாராயண்லால் நன்றி கூறினார்.


Next Story