திருப்போரூர் ஒன்றியத்தில் கனமழை பெய்தும் ஏரிகள் முழுவதும் நிரம்பவில்லை - விவசாயிகள் வேதனை


திருப்போரூர் ஒன்றியத்தில் கனமழை பெய்தும் ஏரிகள் முழுவதும் நிரம்பவில்லை - விவசாயிகள் வேதனை
x

திருப்போரூர் ஒன்றியத்தில் கனமழை பெய்தும் ஏரிகள் நிரம்பாததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரிகளுள் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள தையூர், சிறு தாவூர், கொண்டங்கி ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் 2 நாட்கள் மட்டுமே மழை பெய்ததால் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் இதுவரை நிரம்பவில்லை.

சிறிய அளவிலான, குளம், குட்டைகள் மட்டுமே நிரம்பி உள்ளது. அதேபோன்று, வயல் வெளிகளில் உள்ள தரை மட்டத்திலான கிணறுகள் நிரம்பி விட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஏரி மதகுகளுக்கு நீர் வந்து சேரும் நீர்வரத்து கால்வாய்கள் பெரும்பாலானவை ஆக்கிரமிக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் கடந்த ஆண்டு ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது நீர்வளத்துறை சார்பாக பொதுப்பணித்துறை பராமரிக்கும் ஏரிகள் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

இதற்கிடையே கடந்த 2 தினங்களாக மழை பெய்தாலும் பெரிய அளவிலான ஏரிகள் நிரம்புவதற்கு தேவையான மழை இன்னும் பெய்யவில்லை. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் நடுவில் பெய்ய வேண்டிய மழை 2 வாரம் காலதாமதமாகத் தான் பெய்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக, நேற்று ஒரு நாள் முழுவதும் மழை பெய்யாமல் பல இடங்களில் வெயில் கொளுத்தியது. மாலை 4 மணிக்கு மேல் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. 2 நாட்கள் பெய்த மழையில் திருப்போ ரூர் ஒன்றியத்தில் அடங்கிய பெரிய ஏரிகளான தையூர், சிறுதாவூர், கொண்டங்கி ஆகிய 3 ஏரிகளும் இதுவரை நிரம்பவில்லை. இந்த 3 ஏரிகளும் செங்கல்பட்டு மாவட்டத்திலேயே பெரிய ஏரிகளுள் முறையே 3, 4, 5வது பெரிய ஏரிகளாகும். முதல் இடத்தில் மதுராந்தகம் ஏரியும், 2-வது இடத்தில் பொன்விளைந்த களத்தூர் ஏரியும் உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் அடுத்த போக விவசாயத்திற்கு தேவை யான நீருக்கு இனி பெய்யப்போகும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Next Story