நாளை சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை


நாளை சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
x

சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக நாளை சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்போது பிரதோஷம், அமாவாசை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தசூழலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையை ஒட்டிய தவசிப்பாறை 5-வது பீட்டில் இரட்டை லிங்கம் மற்றும் பச்சரிசிப்பாறை இடையே உள்ள நாவலூற்று பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது.

கடந்த இரு மாதங்களாக இப்பகுதியில் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி வனப்பகுதி வறண்டு செடி கொடிகள் காய்ந்து சருகுகளான நிலையில் காணப்பட்டது. இதனால் தீடீரென பற்றிய காட்டுத்தீ வேகமாக பரவியது. இந்த சூழலில் சம்பவ பகுதிக்கு வனத்துறையினர் தற்போது விரைந்துள்ளனர்.

இந்நிலையில் சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக நாளை (18-07-2023) சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே நேற்று அமாவாசை தரிசனத்திற்காக சென்ற பக்தர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்கி செல்ல தடை விதிக்கப்பட்டு மலையில் உள்ள கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story