திண்டுக்கல்: நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டுகள் சிறை


திண்டுக்கல்: நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 2 Jan 2024 12:45 PM GMT (Updated: 2 Jan 2024 12:55 PM GMT)

விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் அருகே முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதி முருகன், கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை வெளியே சொல்ல முடியாமலும் பெற்றோரிடம் சொல்ல முடியாமலும் மாணவிகள் தவித்து வந்தனர்.

இது குறித்து கல்லூரியில் பயிலும் 3 மாணவிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைதொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதானம் செய்ய வந்த கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை தாக்கினர். மேலும் கல்லூரி தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 300க்கு மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா உள்ளிட்ட மேலும் சிலர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.

அந்த தீர்ப்பில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 75,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story