பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம்


பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம்
x

விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டா்.

பெரம்பலூர்

பாலியல் புகார்

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் கல்யாணி, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி உள் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் தற்காப்பு பயிற்சி (டேக்வாண்டோ) அளித்துவரும் பயிற்றுனர் தர்மராஜன் என்பவர் மதுபோதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

பணியிடை நீக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷிடம் புகார் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பயிற்றுனர் மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய சுரேஷை கைது செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், விளையாட்டு விடுதி மாணவிகள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார்.


Next Story