மாணவர்கள் இடையே தகராறு - பிளஸ் 2 மாணவன் பலி


மாணவர்கள் இடையே தகராறு - பிளஸ் 2 மாணவன் பலி
x

பர்கூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 12 -வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சக்கில் நத்தம் அருகே உள்ள கப்பல் வாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை மதியம் சுமார் நான்கு மணியளவில் பள்ளி இடைவேளையில் சக்கில் நத்தம் கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு அறிவியல் பிரிவு படிக்கும் இரண்டு மாணவர்கள் தைலம் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதில் மாணவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளியில் சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த தென்னை பாளையில் உடன் படிக்கும் மாணவனை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவன் கோபிநாத் அங்கேயே சுருண்டு விழுந்தார். மாணவன் கோபிநாத் வலிப்பு நோய் ஏற்பட்டு துடிதுடித்துள்ளார்.

இதனை அறிந்த அங்கிருந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறி மாணவனை அங்கிருந்து மீட்டு பர்கூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர்.

அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் மாணவனை பரிசோதித்த பொழுது மாணவன் வரும் வழியிலேயே உயிரிழந்தாக தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த மாணவனின் கிராம மக்கள் மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மாணவனை தாக்கிய உடன் படித்த மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இறந்த மாணவன் மற்றும் அவனை தாக்கிய மாணவன் இருவரும் அடுத்தடுத்த வீடுகளைச் சார்ந்தவர்கள் என்பதால் கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்படும் என்று பர்கூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story