தண்ணீர் பிடிப்பதில் தகராறு: தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை...!


தண்ணீர் பிடிப்பதில் தகராறு: தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை...!
x

கோவில்பட்டி அருகே முடி திருத்தும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி விஸ்வநாததாஸ் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜேந்திரன் (வயது40). முடி திருத்தும் தொழிலாளியான இவரது மனைவி பாண்டியம்மாள் (31).

இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் கணபதி மனைவி கருப்பாயி (48) என்பவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு காலை மீண்டும் தகராறு ஏற்பட்ட போது பாண்டியம்மாளுக்கு ஆதரவாக அவரது கணவன் ராஜேந்திரன் அங்கு வந்து கருப்பாயியை கண்டித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ராஜேந்திரன் வெட்டி கொலை செய்யப்பட்டார். பாண்டியம்மாளுக்கும் கத்திக்குத்து விழுந்ததில் படு காயமடைந்தார்.

இதனை தொடர்ந்து கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பைக்கு சென்று தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாலாட்டின்புத்தூர் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 2-ம் தேதி மும்பையில் வைத்து கணபதி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார்.

அதில், முடி திருத்தும் தொழிலாளி கொலை வழக்கில் கணபதி, அவரது மனைவி கருப்பாயி, மகன்கள் ராமர், லட்சுமணன், கண்ணன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story