விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை


விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை
x

விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ள வில்லை என்று புதுக்கோட்டையில் நடந்த அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

அனைத்து துறைகளிலும் ஊழல் நடப்பதை கண்டித்தும், காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர்.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விஜயபாஸ்கர் பேசியதாவது:- விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனை தி.மு.க. அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவர்கள் கவனம் முழுவதும் டாஸ்மாக் கடையில் தான் உள்ளது.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரும்

டாஸ்மாக் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பவர் தற்போது புழல் சிறையில் உள்ளார். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரும். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வருவதற்கு உண்டான வாய்ப்புகள் உள்ளது.

அப்போது அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். இலவச பஸ் பயணம் செல்பவர்களை டிரைவர் மற்றும் கண்டக்டர் கேவலமாக பார்க்கின்றனர். இலவச பயணம் நாங்கள் கேட்கவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ரோட்டிற்கு வந்தால் தான் உரிமை தொகை கிடைக்கும் போல் உள்ளது என்று கூறினார்.


Next Story