தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஆலோசனை: 28-ந் தேதி நடைபெறுகிறது


தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு ஆலோசனை: 28-ந் தேதி நடைபெறுகிறது
x

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் உள்ள தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்த முதல் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வருகிற 28-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டு குழு பங்கேற்க உள்ளது. இந்த குழுவில், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் மாநில முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல், முன்னாள் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் மோகன் பிரகாஷ் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.


Next Story