திராவிடம் என்றால் என்னவென்று தி.மு.க.வினருக்கே தெரியாது, என்னுடைய அரசியல் மாறுபட்டது-விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சீமான் பரபரப்பு பேச்சு


திராவிடம் என்றால் என்னவென்று தி.மு.க.வினருக்கே தெரியாது, என்னுடைய அரசியல் மாறுபட்டது-விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சீமான் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:45 PM GMT)

என்னுடைய அரசியல் மாறுபட்டது என்றும், திராவிடம் என்றால் என்னவென்று தி.மு.க.வினருக்கே தெரியாது என்றும் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

விழுப்புரம்

பொதுக்கூட்டம்

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திராவிடம் என்றால் என்னவென்றே தி.மு.க.வில் இருப்பவர்களுக்கு தெரியாது. தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆடு, மாடு, கோழியை வளர்க்க கூறினார்கள். அதனைத்தான் நான் நாடு முழுவதும் வளர்க்க கூறுகிறேன்.

எத்தனையோ பேர் தன்னை கூட்டணிக்கு அழைத்து பெட்டி தருகிறேன் என்றார்கள். அதனை நான் ஏற்க மறுத்துவிட்டேன், நாலு சீட்டுக்காக விற்பவன் நான் அல்ல.

தரமான கல்வி, மருத்துவம்

காமராஜர் எங்களை எல்லாம் படிக்க வைத்தார். எல்லோரையும் கருணாநிதி படிக்க வைத்ததாக கூறுபவர்கள் ஸ்டாலின் ஏன் சரியாக படிக்கவில்லை. எங்களை எல்லாம் மது குடிக்க வைத்ததுதான் நீங்கள் செய்த சாதனை.

எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள், தரமான கல்வி, தரமான குடிநீர், தரமான சுகாதாரம், தரமான மருத்துவம் கொடுப்போம். அதற்கு எனக்கு முழு அதிகாரம் தேவை.

ஈழப்போர் முடிந்து விட்டது, விழுந்து விட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். கடைசி தமிழன் உயிரோடு இருக்கும் வரை ஈழ விடுதலைப்போராட்டம் தொடரும். உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் தமிழன் உயிரோடு இருக்கும் வரை தமிழ் பேரினத்தின் விடுதலைக்கான புரட்சி இருக்கும். நீங்கள் என்னை நிராகரிக்கலாம், மறைக்கலாம்.

ஆனால் என்னுடைய அரசியலை நிராகரிக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது, என்னுடைய அரசியல் மாறுபட்ட அரசியலாக இருக்கும்.

சாதிவாரி கணக்கெடுப்பு

சாதியை ஒழிப்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அதற்கு ஸ்டாலின் கடிதம் எழுதுவதாக கூறுகிறார். நம்முடைய இனம், மொழி, மண்வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனக்கு வாய்ப்பு அளித்து பாருங்கள், நான் கலப்படமில்லாத நாட்டு பால் கொடுப்பேன், நாட்டு கோழி கொடுப்பேன், ஆடு மாடு வளர்ப்பேன், தேனீக்கள் வளர்ப்பேன், பட்டுப்பூச்சி வளர்ப்பேன், எனக்கு எந்த அவமானமும் இல்லை. உயிர் தேவை உணவுதான்.

போலீசாருக்கு 8 மணி நேரம் பணி, வாரத்தில் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை, 6 மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்வேன்.

தெருவுக்கு, தெரு டாஸ்மாக் கடையை திறந்து சாராயம் விற்றுவிட்டு சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்வது. எங்கள் ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையே இருக்காது. ஏனெனில் நாங்கள் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு பனை சாறு, மூலிகைச் சாறு கடைகளை திறப்போம், எல்லாவற்றையும் எங்களால் மாற்ற முடியும்.

அரசியல் போர்

எங்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் போட்டியே கிடையாது. நமக்கும் திராவிடர்களுக்கும் போர் தொடங்கிவிட்டது. தமிழர் இன எழுச்சியோடு தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மீட்டெடுக்க வந்துள்ள அரசியல் படை நாம் தமிழர் கட்சி.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story