தி.மு.க. அரசு ஆன்மீக புரட்சியை ஏற்படுத்துகிறது - அமைச்சர் சேகர்பாபு


தி.மு.க. அரசு ஆன்மீக புரட்சியை ஏற்படுத்துகிறது - அமைச்சர் சேகர்பாபு
x

தி.மு.க. அரசு ஆன்மீக புரட்சியை ஏற்படுத்துகின்ற அரசு என இந்து சமய அறநிலையத்துறை சொல்கிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

கோவை,

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவராத்திரியில் இரவு முழுவதும் கண் விழித்து தீமைகள் அகன்று நன்மைகள் கிடைக்க வேண்டி சிவனை வழிபடுகின்றனர். பேரூர் பட்டீஸ்வரர் கோவில், நெல்லையப்பர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் கோவில் மற்றும் கபாலீஸ்வரர் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடக்கிறது. அதேபோல் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 330 கோவில்களில் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மக்களுக்கான பணி செய்வது மட்டுமே எங்கள் நோக்கம். இந்த குறுகிய காலத்திற்குள் 500 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. பழனி கோவில் கும்பாபிஷேக விழா, வசைபாடுகிறவர்கள் கூட வாழ்த்தும் அளவுக்கு நடந்தது. சுமார் ரூ.1000 கோடி செலவில் 1,500 கோவில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.

ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் சுமார் 12 ஆயிரத்து 597 கோவில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாக வைப்பு நிதி வழங்கி ரூ.129.5 கோடி ஒதுக்கீடு செய்தது இந்த அரசு தான். சுமார் 2 ஆயிரம் திருக்கோவில்களுக்கு, ஒரு கோவிலுக்கு 2 லட்சம் ரூபாய் என்று வைப்பு நிதி ஒதுக்கி ரூ.40 கோடி அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களுக்கு திருப்பணிகளை மேற்கொள்வதற்கு 100 கோடி ரூபாய் அரசு சார்பில் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் தேவஸ்தானங்களுக்கு ரூ.3 கோடி மானியம், கிராமப்புறம் மற்றும் ஆதி திராவிடர்கள் வசிக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிக்கென ரூ.50 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

ஆன்மீக வாதிகள், இறையன்பர்கள், கோவில்கள் என அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதற்கு முயற்சி செய்கிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதால் தான் இந்த அரசு ஆன்மீக புரட்சியை ஏற்படுத்துகின்ற அரசு என இந்து சமய அறநிலையத்துறை சொல்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story