தமிழ்நாட்டை கொலை, கொள்ளை, தற்கொலை என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து செல்கிறது - ஓ.பன்னீர்செல்வம்


தமிழ்நாட்டை கொலை, கொள்ளை, தற்கொலை என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து செல்கிறது - ஓ.பன்னீர்செல்வம்
x

அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டை கொலை, கொள்ளை, தற்கொலை என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்து செல்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

நேர்மாறான சூழ்நிலை

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவல் துறையினரை பார்த்து சமூக விரோதிகள் அஞ்சுகிறார்கள் என்றால், அந்த நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீராக இருக்கின்றது என்று பொருள். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் இதற்கு முற்றிலும் நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது. ''அமைதி, வளம், வளர்ச்சி'' என்ற பாதையில் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டை ''கொலை, கொள்ளை, தற்கொலை'' என்ற பாதைக்கு தி.மு.க. அரசு அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது.

தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் தமிழ்நாடு அமளிக் காடாக மாறிவிடுகிறது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து போயிருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. படுகொலைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறி வருகின்றன.

யாருக்கும் பாதுகாப்பு இல்லை

இது மட்டுமல்லாமல், சாதி மோதல்கள் ஆங்காங்கே அதிகரித்து வருவதாகவும், தி.மு.க.வினரின் அராஜகம் காரணமாக காவல் துறையினரும், அரசு ஊழியர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், இதன் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்து வருவதாகவும், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பாலியல் தொல்லைகள், கொள்ளைச் சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்த நிலைமை நீடித்தால் சட்டம்-ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விடும்.

எனவே, முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்கும் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story