தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன


தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன
x

உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருப்பூர்

உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் தெருநாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டிகள் செத்தன. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்றுக்குட்டிகள் செத்தன

உடுமலையை அடுத்த சின்னவீரம்பட்டியைச் சேர்ந்தவர் அருளானந்தம். விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் பெரிய கோட்டை கிராமத்தில் உள்ளது. அருளானந்தம் சாகுபடி பணிகளுடன் சேர்த்து கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகிறார். இவர் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க இரண்டு கன்று குட்டிகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கன்றுக்குட்டிகளை தோட்டத்து சாளையில் கட்டிவைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் நேற்று காலை வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மர்ம விலங்கு கடித்ததில் அந்த கன்று குட்டிகள் வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு செத்துகிடந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அருளானந்தம் உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

வனத்துறையினர் விசாரணை

அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் வந்த வனத்துறையினர் பலியான கன்று குட்டிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் நாய்களின் காலடித்தடங்கள் அதிகளவில் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து கன்றுக் குட்டிகளுக்கு கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதில் தெரு நாய்கள் கடித்ததில்தான் கன்று குட்டிகள் செத்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் மர்மவிலங்குகள் நடமாட்டம் ஏதேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளனர். வனத்துறையினரின் நடவடிக்கையால் விவசாயிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

விழிப்புணர்வு

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சின்னவீரம்பட்டி பகுதியில் வளர்ப்பு கோழி பண்ணைகள் உள்ளன. அதில் இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. ஆங்காங்கே திறந்த வெளியில் வீசி விடுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் இறந்த கோழிகளை உணவாக்கி வருகிறது. கோழிகள் கிடைக்காத சமயத்தில் மாமிசத்தின் மீது உள்ள மோகத்தால் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை தெருநாய்கள் துன்புறுத்தி வருகிறது.

இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பண்ணைகளில் இறக்கும் கோழியை முறைப்படி குழி தோண்டி புதைப்பதும் அவசியமாக உள்ளது. அவர்களது அலட்சியமே தெரு நாய்களுக்கு ரத்தவெறி பிடித்து கால்நடைகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறையினர் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் கடமையாகும் என்றனர்.


Related Tags :
Next Story