சுற்றுலா சொகுசு கப்பலில் டாலர் மூலம் மட்டுமே வழங்கப்படும் சேவைகள் - கப்பல் நிர்வாகம் விளக்கம்


சுற்றுலா சொகுசு கப்பலில் டாலர் மூலம் மட்டுமே வழங்கப்படும் சேவைகள் - கப்பல் நிர்வாகம் விளக்கம்
x

சொகுசு சுற்றுலா பயணத்துக்காக சென்னை துறைமுகத்தில் இருந்து ‘எம்பிரஸ்’ எனும் சொகுசு கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக மக்களுக்கு சொகுசு கப்பலின் புதிய அனுபவத்தையும், திகில் நிறைந்த ஆழ்கடல் பயண அனுபவத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் 'கார்டிலியா குருயிசஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அதன்படி, மக்களின் சொகுசு சுற்றுலா பயணத்துக்காக சென்னை துறைமுகத்தில் இருந்து 'எம்பிரஸ்' எனும் சொகுசு கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பல் பயன்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைமுகத்தில் கடந்த 4-ந்தேதி தொடங்கி வைத்தார்.

5 நட்சத்திர ஓட்டல் போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்த சொகுசு கப்பல் 700 அடி நீளம் கொண்டது. அடுக்கடுக்காக 11 தளங்களை கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 796 அறைகள் இருக்கின்றன. மேலும் 4 பெரிய உணவகங்கள், மதுக்கூடம் (பார்), உடற்பயிற்சி கூடம் (ஜிம்), சினிமா தியேட்டர்கள், ஸ்பா, மசாஜ் சென்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ (சூதாட்ட கிளப்புகள்), நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, கப்பலின் ஓரம் அமர்ந்து கடல் அழகை கண்டுகளிக்கும் கூடம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன.

இந்த நிலையில் அந்த கப்பலில் வைஃபை, ஸ்பா, மதுபான விடுதி உள்ளிட்ட சேவைகளுக்கு அமெரிக்க டாலர் மூலமாக மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள கப்பல் நிர்வாகம், கடற்பரப்பில் அனைத்து பரிவர்த்தனைகளும் டாலரில் நடப்பதாலும், வியாபாரமும் டாலரை சார்ந்து இருப்பதாலும், இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.


Next Story