உருமாறிய கொரோனா தொற்று குறித்து பயப்பட வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


உருமாறிய கொரோனா தொற்று குறித்து பயப்பட வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 16 Dec 2023 6:45 PM GMT (Updated: 16 Dec 2023 6:46 PM GMT)

நோய் எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்தும் வகையில் 98 சதவீதத்துக்கு மேலானவர்களுக்கு 3 விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு தமிழ்நாடு மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை அடையாறு மண்டலம், வேளச்சேரி 100 அடி சாலை, சசிநகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

கொரோனா 2019-ல் தொடங்கி பல்வேறு வகையில் உருமாற்றங்களை பெற்று வருகிறது. நோய் எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்தும் வகையில் 98 சதவீதத்துக்கு மேலானவர்களுக்கு 3 விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு தமிழ்நாடு மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து வருகிறது. கொரோனா ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், கம்மா, கப்பா, ஒமைக்ரான் போன்ற பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சிங்கப்பூர் நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டது. அங்குள்ள சிங்கப்பூர் தேசிய நிறுவனத்திடம் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து கேட்டறிந்தோம். 3 முதல் 4 நாட்களில் இந்த தொற்று சரியாகிவிடுகிறது என்றும், இருமல், சளி ஆகிய 2 பாதிப்புகள் மட்டும் இருக்கிறது என்றும் தெரிவித்தனர். அதேபோல், கேரள மாநிலத்திலும் பாதிப்பு உள்ளது. அங்கும் கேட்டோம்.

எனவே இந்த தொற்றின் பாதிப்பு என்பது மிதமான பாதிப்பாகவே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் 4 நாட்களிலேயே சரியாகிவிடுகின்றனர் என்பது இன்றைய களநிலவரமாக உள்ளது. ஆகவே உருமாறிய கொரோனா தொற்று குறித்து பயப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story