தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல்


தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 26 Oct 2023 7:30 PM GMT (Updated: 26 Oct 2023 7:31 PM GMT)

கிணத்துக்கடவு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தக்காளி செடிகளில் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தக்காளி சாகுபடி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 1,600 ஏக்கரில் தக்காளி பயிரிடுவது வழக்கம்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தக்காளி பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்தனர்.

ஒருசில இடங்களில் மட்டும் அவ்வபோது கிடைத்த சாரல் மழை மற்றும் சொட்டு நீர் பாசனத்தை கொண்டு தக்காளி சாகுபடி செய்தனர். அந்த வகையில், சுமார் 550 ஏக்கர் மட்டும் தக்காளி பயிரிடப்பட்டு உள்ளது.

நோய் தாக்குதல்

இந்தநிலையில் கிணத்துக்கடவு அருகே தேவரடிபாளையம், வடபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் விளைச்சலுக்கு வந்துள்ள தக்காளி செடிகளில் வைரசால் ஏற்படும் வாடல் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தவிர்க்க தக்காளி செடிகளுக்கு பல்வேறு வகையான மருந்துகளை விவசாயிகள் தெளித்து வருகின்றனர். ஆனாலும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஏற்கனவே உச்சத்தில் இருந்த தக்காளி விலை பாதாளத்துக்கு வந்துவிட்டது. தற்போது நோய் தாக்குதலும் அதிகரித்து வருவதால், என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

அச்சம்

தேவரடிபாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி:- இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாமல் இருந்தாலும், சொட்டு நீர் பாசனம் அமைத்து 2 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து உள்ளேன். இதற்கு ரூ.1½ லட்சம் வரை செலவானது. தற்போது விளைச்சல் தொடங்கியுள்ள நிலையில், தக்காளி செடிகளின் அடிப்பகுதியை வாடல் நோய் தாக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கில் ரூபாய் செலவு செய்து, பல்வேறு வகை மருந்துகளை வாங்கி, தக்காளி செடிகளுக்கு தெளித்தும், எந்த பயனும் இல்லை. இதனால் விளைச்சல் பாதிக்கிறது. இதனால் செலவு செய்த பணத்தை திரும்ப முடியாதோ? என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

மருந்து இல்லை

வடபுதுரை சேர்ந்த சக்திவேல்:-தக்காளி செடியில் பூ பூத்த பிறகு காய்ப்பு ஏற்படும். இந்த காய்களின் பாதுகாப்புக்காக குச்சிகள் நட்டு கம்பி கட்டுவது வழக்கம். அந்த நேரத்தில் செடியை வைரசால் ஏற்படும் வாடல் நோய் தாக்கி வருகிறது. எந்த மருந்துகளை பயன்படுத்தினாலும், அந்த நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி விவசாயம் சிறப்பாக இருந்தது. தற்போது அப்படி இல்லை. நாளுக்குநாள் நோய் தாக்குதல் அதிகரிக்கிறது. இப்போது பரவி வரும் வாடல் நோயை கட்டுப்படுத்த மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். எனவே தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த நோயை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story