பொங்கல் தினத்தன்று வறண்ட வானிலை நிலவும் -வானிலை ஆய்வு மையம் தகவல்


பொங்கல் தினத்தன்று வறண்ட வானிலை நிலவும் -வானிலை ஆய்வு மையம் தகவல்
x

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 செ.மீ., மழை பதிவானது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 13 செ.மீ., மதுராந்தகம் தாலுகா அலுவலகம் பகுதியில் 12 செ.மீ., மழை பெய்தது. தற்போது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளிலும், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. அதன்பிறகு, படிப்படியாக மழையின் அளவு குறைகிறது. வருகிற பொங்கல் தினத்தன்று மழை பெய்யுமோ என்ற அச்சம் பொது மக்களுக்கு வேண்டாம் என்றும், ஜனவரி 13-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story