பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர்

பலத்த மழை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்ட 'மாண்டாஸ்' புயல் காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர்வரத்து அதிகமாகியதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 13-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

புழல் ஏரிக்கு திறப்பு நிறுத்தம்

இரு ஏரிகளுக்கும் வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனிடையே பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடந்த வாரம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு தற்போது நீர் வரத்து இல்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த 29-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 33.43 அடி ஆக பதிவாகியது. ஏரியில் 2.648 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியின் உயரம் 21.20 அடி ஆகும். இதில் 3.300 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 20.87 அடியாக பதிவாகியது. 3.184 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 159 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story