பொன்னேரியில் முதியவர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது


பொன்னேரியில் முதியவர் வெட்டிக்கொலை - 3 பேர் கைது
x

பொன்னேரியில் முன் விரோதத்தால் முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பர்மா நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 70). கட்டிட மேஸ்திரியாகவும் தள்ளு வண்டியில் சிற்றுண்டி கடை நடத்தியும் வந்தார். இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்ற நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தள்ளு வண்டியில் அமர்ந்து இருந்தார். அப்போது மர்ம நபர்கள் முன் விரோதத்தால் சுப்பையாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் பொன்னேரி பர்மா நகரை சேர்ந்த லட்சுமிகாந்தன் என்கிற குட்டிகாந்தன் (29), அருணாச்சலம் (20), சக்திவேல் (24) என்பதும் பர்மாவில் இருந்து வந்த 28 குடும்பத்தினரில் 27 குடும்பத்தினர் ஒரு பிரிவாகவும் சுப்பையா மற்றொரு பிரிவாகவும் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

சுப்பையாவின் வீட்டுமனையில் முனீஸ்வரன் கோவில் இருப்பதால் தனக்கு சொந்தமானது என்று கூறிவந்த நிலையில் பொன்னேரி உரிமையியல் கோர்ட்டில் வழக்கு உள்ளது என்றும் இதனால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமிகாந்தன், அருணாச்சலம் , சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story