கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி


கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
x

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்,

டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

போராட்டத்திற்கு முன் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக அரசு உரிய தண்ணீர் வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காய்ந்து வருகிறது. கண்முன்னே வாடிய பயிரை கண்டு விவசாயி ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவரது குடும்பத்தினரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். தே.மு.தி.க நிர்வாகிகள் நேரில் சென்று ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாட்டிற்கே உணவு அளிப்பவர்கள் விவசாயிகள். ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை.

ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும். தே.மு.தி.க என்றைக்கும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

டெல்டா மாவட்டங்களில் சரியாக தூர்வாரவில்லை. மணல் கொள்ளை, கனிமவள கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் எங்கு செல்கிறது. அதனை முறையாக சேமிக்கவில்லை. தடுப்பணைகளை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் காவிரி பிரச்சனை வருகிறது. மழைக்காலம் வந்தால் மறந்துவிடுகிறோம்.

இதற்கு நிரந்தர தீர்வு வர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் காரணம். இது நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தே.மு.தி.க எடுக்கும். உரிய நேரத்தில் தே.மு.தி.க நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார். தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story