பொன்னேரி அருகே சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை - 2 பேர் கைது


பொன்னேரி அருகே சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை - 2 பேர் கைது
x

பொன்னேரி அருகே உறவினருக்கிடையே நடந்த சொத்து தகராறில் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

பொன்னேரி அருகே ஆலாடு சாலையில் வசித்து வந்தவர் மோகன். இவரது தங்கை நந்தினி (வயது 55). இவருக்கும் மோகனின் மகள் காயத்ரி (20) என்பவரது தரப்புக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே நந்தினி தரப்பை சேர்ந்த நாகம்மாள் (58), ஹரிஹரன் (36), சுரேஷ்குமார் (32), இளங்கோ (44) ஆகியோர் மிரட்டல் விடுத்ததாக பொன்னேரி போலீசில் காயத்ரி புகார் செய்தார். அதேபோல் காயத்ரி தரப்பை சேர்ந்த ராபர்ட் (34), ஹரிஷ் (23) உட்பட 7 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக பொன்னேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இருதரப்பினரின் புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் பொன்னேரி அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் பாலமுருகன் (48). இவர் எண்ணூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் தனது அக்காள் மகன் ராபர்டை பார்ப்பதற்காக பாலமுருகன் ஆலாடு பகுதியில் உள்ள ராபர்ட் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து அங்கிருந்த வினோத் மற்றும் அவரது நண்பர் கிரண்ராஜ் உள்பட சிலர் அடித்ததில் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே பாலமுருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், கிரண்ராஜ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story