அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு


அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: அலுவலர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
x

சம்பந்தப்பட்ட பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை ராமநாதபுரம் சாலை விரகனூர் சந்திப்பில் வைகை ஆற்று நீர்நிலை பகுதியில் கட்டிடம் கட்டப்படுவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி சுப்பிரமணியம், நீதிபதி லட்சுமி நாராயணன் ஆகியோர் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்காகவோ, நீர்நிலையாகவோ இருந்தால் கட்டுமான அனுமதி முறைப்படி ரத்து செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் அரசு நிலம், அரசு புறம்போக்கு நிலம், நீர்ப்பிடிப்பு பகுதிகள் குறித்து வருவாய்த்துறையினருக்குதான் தெரியும் எனவும், அவர்களது துணையின்றி இந்த நிலங்களை ஆக்கிரமிக்கவோ, பட்டா பெறவோ, கட்டுமானம் மேற்கொள்ளவோ முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அரசு அலுவலர்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஆவணங்களை மாற்றம் செய்து பட்டா பெற்றது தெரியவந்தால் பட்டாவை ரத்து செய்து ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story