அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்


அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 12 Aug 2023 10:55 AM GMT (Updated: 12 Aug 2023 11:52 AM GMT)

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதிக்கக்கோரி சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ஒப்புதல் அளித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார். அதன்படி, செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிவடைந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, 3,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அனைத்து ஆவணங்களும் டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

தொடர்ந்து, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25 ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Next Story