ஆவடி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி என்ஜினீயர் பலி
![ஆவடி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி என்ஜினீயர் பலி ஆவடி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி என்ஜினீயர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/05/15/1286409-2.webp)
ஆவடி அருகே தடுப்பு சுவரில் கார் மோதி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
என்ஜினீயர்
ஆவடி வசந்தம் நகரைச் சேர்ந்தவர் நரேந்திரன் (வயது 30). என்ஜினீயரான இவர், சென்னை கந்தன்சாவடி அருகே உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இவர், காரில் சொந்த ஊரான அரக்கோணம் சென்று அன்னையர் தினத்தையொட்டி தாய்-தந்தையை பார்த்துவிட்டு மீண்டும் ஆவடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். நேற்று இரவு 8 மணியளவில் ஆவடி ஜே.பி.எஸ்டேட் அருகே வந்தபோது நரேந்திரன் ஓட்டிவந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் தடுப்பு சுவரில் மோதியதுடன், தடுப்பு சுவர் மீது ஏறி நின்றது.
பலியானார்
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நரேந்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நரேந்திரனுக்கு திருமணமாகி ஜனனி என்ற மனைவியும், 9 மாத கை குழந்தையும் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான நரேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.