திருமுல்லைவாயல் அருகே என்ஜினீயர் மர்ம சாவு - காருக்குள் பிணமாக கிடந்தார்


திருமுல்லைவாயல் அருகே என்ஜினீயர் மர்ம சாவு - காருக்குள் பிணமாக கிடந்தார்
x

காருக்குள் அமர்ந்து மது அருந்திய என்ஜினீயர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சென்னை

திருமுல்லைவாயல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் வசித்து வந்தவர் அமுல் சத்தியசீலன் (வயது 38). என்ஜினீயரான இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் கொடுங்கையூர் ஆகும்.

இவருக்கு 2013-ம் ஆண்டு பெருங்களத்தூரைச் சேர்ந்த வந்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதில் கெவின் என்ற மகன் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு வந்தனா தனது மகனுடன் அவரது ெபற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அமுல் சத்தியசீலன் தனது தாயாருடன் இந்த வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மதியம் அமுல் சத்தியசீலன், சர்வீசுக்கு விட்டிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மதுக்கடைக்கு சென்று மது பாட்டில்கள் வாங்கி வந்த அவர், காருக்குள் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் நேற்று முன்தினம் இரவு 11 மணி ஆகியும் அவரது கார் அதே இடத்தில் நின்றுகொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மதுக்கடை ஊழியர்கள், திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கார் கதவை திறக்க முயற்சித்தனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை.

இதையடுத்து போலீசார் கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது காருக்குள்ளே அமுல் சத்தியசீலன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகிலேயே மது பாட்டில்களும் இருந்ததாக தெரிகிறது.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மனைவி, மகன் பிரிந்து சென்ற மனவிரக்தியில் இருந்து வந்த அமுல் சத்தியசீலன் கார் கண்ணாடியை மூடிவிட்டு, ஏ.சி.போட்டு உள்ளே அமர்ந்து மது அருந்தி உள்ளார். போதையில் தூங்கிவிட்ட அவர், மூச்சுத்திணறி இறந்தாரா? அல்லது மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து ெகாண்டாரா? அல்லது ேவறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அமுல் சத்தியசீலனின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story