ஈரோடு இடைத்தேர்தல்: கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்


ஈரோடு இடைத்தேர்தல்: கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்
x

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்காக கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து இத்தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாகல் கடந்த 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடந்தது.

இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியது உள்ளதால், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின்படி, 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்காக கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யபட்டிருந்த நிலையில், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு அவற்றை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.


Next Story