ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக மண் எடுக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு


ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக மண் எடுக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
x

தமிழகத்தில் ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து பயன்படுத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்து இருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டரிடம் அனுமதியைப் பெற்று அதனை எடுத்துக் கொள்ள வழி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

நன்செய் நிலங்களின் மேம்பாட்டுக்காக ஹேக்டருக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புன்செய் நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹேக்டருக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விவசாயிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்று இலவசமாக மண்ணை எடுத்துக் கொள்ளலாம்.

20 நாட்களுக்கு மிகாமல் ஏரி குளங்களில் இருந்து நிர்ணயித்தளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Next Story