பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க 'டிரோன்' கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு


பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவியை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் - தமிழக அரசு அறிவிப்பு
x

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க டிரோன் கருவிகளை விவசாயிகள் மானியத்தில் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை

விவசாயத்தில் நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும், விவசாயிகள் காலத்தே சாகுபடி பணிகளை மேற்கொண்டு பயிர் உற்பத்தி திறனை உயர்த்தவும் தமிழ்நாடு அரசு, வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி வருகிறது.

இந்த திட்டம் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு, தற்போது 2-ம் கட்டத்திற்காக 70 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்தல், பூச்சி நோய் கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள டிரோன் போன்ற நவீன வேளாண் கருவிகளும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

2023-24-ம் நிதியாண்டில், தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கும் திட்டத்தில், டிரோன்கள் வாங்க விரும்பும் சிறு, குறு, ஆதி திராவிடர், பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானிய தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்ச மானிய தொகையாக ரூ.4 லட்சம் வழங்கப்படுகிறது.

ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

விவசாயக் குழுக்கள், கூட்டுறவு சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மூலம் மானியத்தில் அமைக்கப்படும் வட்டார மற்றும் கிராம அளவிலான வேளாண் எந்திர வாடகை மையங்களில் தேவைப்படுகின்ற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுடன் சேர்த்து டிரோன் கருவிகளையும் மானியத்தில் பெறலாம்.

இதற்கு 40 சதவீதம் அல்லது ரூ.4 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

டிரோன்களைக் கொண்டு வேளாண் எந்திர வாடகை மையம் அமைக்க அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்ட வேளாண் எந்திர வாடகை மையங்கள், உயர் தொழில்நுட்ப வாடகை மையங்களில் டிரோன்களை வாங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு டிரோன்களின் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.5 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

டிரோனை மானியத்தில் பெறும் விவசாயிகள் அதனை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் உரிமத்தினை பெற்று டிரோனை இயக்கலாம் அல்லது ஏற்கனவே பயிற்சி பெற்று உரிமம் பெற்ற இளைஞர்கள் மூலம் இயக்கலாம். டிரோனை வாங்க வங்கிக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியில் இருந்து 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story