சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்பு


சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்பு
x

மெலட்டூர் பகுதியில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர் பகுதியில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை

தஞ்சை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்வதால் வயல்களிலும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

தஞ்சை மாவட்டம் மெலட்டூரை அடுத்த கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு மற்றும் நடவு முறையில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

விவசாயிகள் வேதனை

இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நாற்றுகள் மூழ்கி உள்ளன. ரெகுநாதகாவேரி வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தால் மழைநீர் வெளியேற வழியின்றி வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்திருந்தோம். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தூர்வார வேண்டும்

ரெகுநாதகாவேரி வாய்க்காலை விரைந்து தூர்வாருவதுடன், மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு உடனடியாக அரசு உரிய நிவாரண தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Next Story