அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை


அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை
x

அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). இவர், போரூர் சி.எல்.எப். பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த என்ஜினீயர் மதுமொழி (33) என்ற பெண்ணை 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வெங்கடேசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனமுடைந்த முதுமொழி, செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் ஊராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த அவரது தங்கை வீட்டுக்கு சென்று தங்கினார்.

நேற்று தங்கை குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் என்ஜினீயர் மதுமொழி அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாழம்பூர் போலீசார், மதுமொழி உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் என்ஜினீயர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story