தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற பெண் பஞ்சாயத்து தலைவர் திடீர் மாயம் - கணவர் பரபரப்பு புகார்


தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்ற பெண் பஞ்சாயத்து தலைவர் திடீர் மாயம் - கணவர் பரபரப்பு புகார்
x

ஆம்பூர் அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவரை காணவில்லை என்று அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவரை காணவில்லை என்று அவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆம்பூரை அடுத்த மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாயக்கனேரியில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது, நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவர் பதவி, பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், நாயக்கனேரி மலை கிராம மக்கள், தங்கள் பகுதியில் பட்டியல் சமூகத்தினர் யாரும் இல்லை என்று கூறி தேர்தலை புறக்கணித்தனர்.

தேர்தலில் யாரும் போட்டியிடாத நிலையில், நாயக்கனேரியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த பட்டியலின பெண்ணான இந்துமதி, கடைசி நாளில் கடைசி நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி வேட்பு மனு தாக்கல் செய்த அவர், போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து, நாயக்கேனரி மக்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், இந்துமதி பதவி ஏற்பதை கோர்ட்டு ஒத்தி வைத்தது.

நாயக்கனேரி மக்களின் எதிர்ப்பால், இந்துமதியின் குடும்பத்தினர் பெரியாங்குப்பத்தில் வாடகை வீட்டில் வசித்த நிலையில், சனிக்கிழமை மாலை கடைக்குச் சென்ற இந்துமதி வீடு திரும்பவில்லை எனக் கூறி, அவருடைய கணவர் பாண்டியன் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நாயக்கனேரி பகுதியைச் சேர்ந்த சிலர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story