ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது


ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது
x

கொரடாச்சேரி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

கொரடாச்சேரி;

கொரடாச்சேரி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

ரூ.6 ஆயிரம் லஞ்சம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கிருஷ்ணகோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்(வயது 65). இவர், தனது சகோதரர் மாசிலாமணியிடம் இருந்து தான செட்டில்மெண்ட் அடிப்படையில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார்.இதற்காக பட்டா மாறுதல் கோரி மதியழகன் பெருமாளகரம் கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம்(42) விண்ணப்பித்தார். அப்போது பட்டா மாறுதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சுதா, தனக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மதியழகன் இது குறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தாா். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி மதியழகன் நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.6 ஆயிரத்தை அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் சுதாவிடம் வழங்கினார்.

கைது

அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சுதா வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சுதாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சுதாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் சக அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story