அம்மாவின் நகையை பிரிப்பதில் மகன்களுக்கு இடையே சண்டை - 100 அடி உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த முதியவர்...!


அம்மாவின் நகையை பிரிப்பதில் மகன்களுக்கு இடையே சண்டை - 100 அடி உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த முதியவர்...!
x

நாட்டறம்பள்ளி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 100 அடி உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி முதியவர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரது மகன் விஜயன் (வயது 60). இவருடன் சகோதரர் பாண்டுரங்கன் (64) மற்றும் 2 பெண்கள் உள்பட 4 பேர் உள்ளனர்.

இந்நிலையில் தந்தை சாம்ராஜ் மனைவி லட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் லட்சுமி வைத்து இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை 4 பிள்ளைகள் பிரிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஊர் பொதுமக்கள் லட்சுமி நகைகளை பெண் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதன் காரணமாக பாண்டுரங்கன் மகன் அருள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தனது பாட்டி லட்சுமி உயிரிழந்ததன் காரணமாக ஊருக்கு வந்திருந்தார். அப்போது லட்சுமிக்கு சொந்தமான 12 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்க பணத்தை தனக்கு சொந்தம் என கூறி அருள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து விஜயன் என்னுடைய அம்மாவின் தங்க நகையை பாகமாக பிரித்து கொடுக்குமாறு அண்ணன் மகன் அருளிடம் கேட்டுள்ளார்.‌ இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தகாத வார்த்தைகளால் திட்டிய அருள் நகையும், பணமும் தர முடியாது என கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த முதியவர் விஜயன் இன்று காலை 7.30 மணியளவில் குண்டு ரெட்டிமேடு பகுதியில் உள்ள 100 அடி உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தற்கொலைக்கு முயன்ற விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கீழ இறங்கி வரமறுத்து விட்டார். மேலும், பணமும், நகையையும் பிரித்து தருவதாக கூறினால் மட்டுமே கிழே இறங்கி வருவதாக என்றும் கூறியுள்ளார்.

பின்னர், ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நகைகளை பிரித்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் முதியவர் விஜயன் கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story