வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதிஉதவி - வேளாண்மை அதிகாரி தகவல்


வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதிஉதவி - வேளாண்மை அதிகாரி தகவல்
x

வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நிதிஉதவி அளிக்கப்படும் என்று வேளாண்மை அதிகாரி சுரேஷ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் 2022-23 -ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 3 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதிஉதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் பயனடைந்த தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும் 25 சதவீத மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளிகள் 21 முதல் 40 வயதுடைய வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை என்ஜினீயரிங் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்தவராகவும் அரசு மற்றும் தனியார் நிறுனத்தில் பணிபுரியாதவராகவும் இருக்க வேண்டும். கணினித்திறன் பெற்ற மற்றும் குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதியுதவி பெற தகுதியுடையவர். வங்கி மூலம் கடன் பெற்று தொழில் புரிவோரது நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாகவும், தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான செலவை, திட்ட மதிப்பீட்டில் சேர்க்க கூடாது.

தேவையான ஆவணங்களாவன 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்புக்கான சான்றிதழ், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, தொடங்க உத்தேசித்துள்ள வேளாண் தொழில் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை வங்கி கணக்கு புத்தகம் வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் ஆகும்.

இந்த திட்டத்தில் பதிவு செய்ய விருப்பமுள்ள பயனாளிகள் (அக்ரிஸ்நெட்) இணைய முகப்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30.8.2022-க்குள் பதிவு செய்ய வேண்டும்.

தங்களின் விரிவான திட்ட அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண் இணை இயக்குனரிடம் சமர்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story