தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி


தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி
x

தேவாலயங்களை புனரமைக்க நிதி உதவி வழங்கப்படுகிறது.

கரூர்

தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு மானிய தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானியத் தொகை விவரம் வருமாறு:- 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலிருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களில் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதிஉதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலய நிர்வாகிகள் இத்திட்டத்தை பயன்படுத்தி பயன் அடையலாம் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story