டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி பெறும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி பெறும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் நிதிநுட்பத்துறை மிகப்பெரிய வளர்ச்சி காணும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பரவலாக முதலீடு

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ள நிதிநுட்ப நகரம் (பைன்டெக் சிட்டி) மற்றும் நிதிநுட்ப கோபுரம் (பைன்டெக் டவர்) கட்டுமானம் ஆகியவற்றிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தொழில்துறை மிக வேகமான முன்னேற்றங்களை உருவாக்கி தந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழில்துறை நிகழ்ச்சிகள், நமது மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் நிகழ்ச்சிகளாக அமைந்திருக்கின்றன. தொழில் துறையில், சாதனை மேல் சாதனைகளை நாம் செய்து வருகிறோம்.

முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் ஒரு பெரிய லட்சியத்தை கொண்டதாக இருக்கிறது.

நமது கடுமையான முயற்சி, உலகளாவிய நிறுவனங்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பதால், தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாட்டை நோக்கி வந்த வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இளைஞர்கள், பெண்கள் அவர்களது வசிப்பிடத்திற்கு அருகிலேயே பணிபுரிய ஏதுவாக, பரவலாக மாநிலம் முழுவதும் இந்த முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் பணவரிவர்த்தனை

நிதிநுட்பத்துறைக்கான மின்னணுமயமாக்கப்பட்ட நிதிச்சேவைகள் அனைத்தும் ஏழை, எளிய மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். ஆன்லைன் விற்பனைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகரிக்க தொடங்கிய மின்னணுமயமாக்கப்பட்ட வங்கி சேவைகளின் பயன்பாடு, தற்போது பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக்கொண்டு நாமும் வளர்ந்திட வேண்டியது அவசியம்.

தற்போது ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதைவிட, செல்போன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வது அதிகமாக உள்ளது. வங்கிகள் ஏறக்குறைய முழு டிஜிட்டல் வங்கிகளாக மாறிவிட்டனவோ என்ற அளவிற்கு, தற்போது டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.

முற்றிலுமாக எல்லா இடங்களுக்கும் எல்லாத் தரப்பினரையும் இது இன்னும் சென்றடையவில்லை என்றாலும் எதிர்காலத்தை கருதி, அதற்கு ஏற்ப நமது திட்டமிடுதல்கள் இருக்க வேண்டும்.

மிகப்பெரிய வளர்ச்சி

தற்போது அதிவேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்னணுவியல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளன. பாரம்பரியமாக செயல்பட்டு வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதிநிறுவன சேவைகள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் நிதிநுட்பத்துறையும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என்று உறுதியாக நம்புகிறேன்.

நிதிநுட்பத்தொழில் சூழலமைப்பை பொறுத்தவரையில், தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதற்கு இங்கு அமையப் பெற்றுள்ள நிறுவனங்களே சாட்சி. படித்த திறன்மிகு இளைஞர்களின் சக்தி இங்கு கொட்டிக்கிடக்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இதை தக்க வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும்.

நிதிநுட்ப பிரிவு

நிதிநுட்பத்துறை முதலீடுகளை மதிநுட்பத்துடன் ஈர்க்க ஏராளமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 2025-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நிதிநுட்ப நிறுவனங்களின் உலகளாவிய மையமாக மாற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு நிதிநுட்ப கொள்கை 2021 என்ற சிறப்பு கொள்கையை நான் வெளியிட்டிருக்கிறேன்.

ரூ.50 கோடிக்கு மேல் முதலீடு மேற்கொள்ளும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தொழில்துறை வழிகாட்டி நிறுவனத்தில் தனியே ஒரு நிதிநுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. தொழில்துறை அமைச்சர் தலைமையில் ஒரு நிதிநுட்ப ஆட்சிமன்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

நவீன உள்கட்டமைப்பு

இந்த வரிசையில் நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் அமைத்திடுவதற்கும், நிதிநுட்ப சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில், ஒரு நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்துள்ளேன். இந்த நிதிநுட்ப நகரத்தில், இந்திய மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்துத்தர இருக்கிறோம்.

அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான நிதிச்சேவைகள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் அதனுடைய மையமாக இந்த நிதிநுட்ப நகரம் செயல்படும்.

இது வெறும் தொடக்கம்தான். ஜனவரி மாதம் நடைபெற உள்ள, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிக அளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story