ஓசூரில் மீன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை12½ கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் அழிப்பு


ஓசூரில் மீன் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை12½ கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் அழிப்பு
x
தினத்தந்தி 28 May 2023 7:00 PM GMT (Updated: 28 May 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் உள்ள மீன் கடைகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 12½ கிலோ ரசாயனம் கலந்த மீன்கள் அழிக்கப்பட்டன.

திடீர் ஆய்வு

ஓசூர் பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் பார்மலின் என்ற ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மீன்வள சார் ஆய்வாளர் ஆகியோருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

இந்த புகார்களின் அடிப்படையில் நேற்று ஓசூர் மீன்வள சார் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ஓசூர் பகுதிகளில் உள்ள பல்வேறு மீன் கடைகளில் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது மீன் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான மீன்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் அந்த நீரை பார்மலின் கிட் மூலம் சோதனை மேற்கொண்டனர்.

எச்சரிக்கை

இந்த சோதனையின் போது பார்மலின் ரசாயனம் கலந்து விற்பனை செய்ததாக 2 மீன் கடைகாரர்களை எச்சரித்த அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 12.5 கிலோ ரசாயன மீன்களை பறிமுதல் செய்து குழி தோண்டி அதில் கொட்டி அழித்தனர்.

ஓசூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மீன் கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் மீன் வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் ரசாயனம் கலந்த மீன்களையோ அல்லது கெட்டுப்போன மீன்களையோ விற்ககூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர்.


Next Story