நாகை விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு


நாகை விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
x

நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நாகை,

தமிழக கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை பழுதுநீக்குவது, எஞ்சின்களை மாற்றியமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் நாகை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட வலைகள், எஞ்சின்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து நாகையில் இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது படகுகளில் தடை செய்யப்பட்ட அதிக குதிரைத்திறன் கொண்ட எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா என்பது குறித்தும், தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் தலைமையில், அதிகாரிகள் 8 குழுக்களாக பிரிந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story