சென்னை-லண்டன் இடையே ஒரு வாரமாக விமான சேவை ரத்து - பயணிகள் அவதி


சென்னை-லண்டன் இடையே ஒரு வாரமாக விமான சேவை ரத்து - பயணிகள் அவதி
x

சென்னை-லண்டன் இடையே ஒரு வாரமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நேரடி விமான சேவையை தினமும் இயக்கி வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 3.15 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும்.

சென்னை-லண்டன் இடையே நேரடி விமான சேவை என்பதாலும், லண்டன் சென்று அங்கு இருந்து ஸ்காட்லாந்து, பிரேசில், ரோம், பாரீஸ், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை-லண்டன் இடையே இயக்கப்படும் தினசரி விமானத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமான பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தற்போது துபாய், கத்தார், அபுதாபி, பிராங்க்பார்ட் வழியாக லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடியாக செல்லாமல் மாற்று வழியில் இணைப்பு விமானங்கள் மூலம் செல்வதால் பயணிகளுக்கு பயண நேரம் அதிகரிப்பதோடு, அதிகமான செலவு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் பயணிகள் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை மீண்டும் இயக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது;-

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமையகமான லண்டனில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறுகள் திடீரென ஏற்பட்டு உள்ளதால் சர்வதேச அளவில் இயக்கப்பட்டு வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரு தினங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு மீண்டும் சென்னை-லண்டன் இடையே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சேவை வழக்கம்போல் இயங்கத் தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story