கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியாக உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்துவிடப்படுகிறது. அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் 60,000 கனஅடி வரை திறந்துவிடப்பட உள்ளது. திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு எந்நேரத்திலும் அதிகரிக்கப்படலாம். இதன்காரணமாக கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் நண்பகல் நிலவரப்படி சுமார் 13,200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரால்கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகளவு இருக்கும். எனவே அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் உள்ள வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்று கொண்டு பொதுமக்கள் "செல்பி" எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும். நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story