கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கரையோர பகுதிகளில் ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

மேட்டூர் அணை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை ஏற்கனவே எட்டியுள்ளதை தொடர்ந்து, நேற்று காலை அணையில் இருந்து படிப்படியாக 90 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

இந்தநிலையில், 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் வரை எந்த நேரத்திலும் அதிகரிக்கப்பட உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை நிலவரப்படி சுமார் 45 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரி நீரால் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகளவு இருக்கும்.

வெள்ள அபாய எச்சரிக்கை

எனவே, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும் கரையோர கிராமங்களில் உள்ள வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மேலும், பாதுகாப்பற்ற கரையோர பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கும் என்பதால் அந்தப்பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகள் விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்ப்பதுடன், நீர்நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


Next Story