கொடுமுடி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் மிதக்கும் குடியிருப்புகள்...!


கொடுமுடி காவிரியில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தனியார் மண்டப முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

கொடுமுடி,

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவேரி கரையோர பகுதி வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி இலுப்பை தோப்பு பகுதியில் மொத்தம் சுமார் 75 குடியிருப்புகளில் 35 வீடுகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு தனியார் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இலுப்பை தோப்பு பகுதிகளிலிருந்து மொத்தம் 121 நபர்களும் மேலும் கொடுமுடி வடக்கு தெரு புது மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இப்பகுதியிலிருந்தூ பாதிக்கப்பட்ட 29 நபர்களும் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10:30 மணி முதல் 12 மணி வரை தூரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தார்கள். மேலும் முகாம்களில் மருத்துவர்கள் தங்கியுள்ள பொதுமக்களை பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்கள்.

மேட்டூர் அணையில் இருந்து மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது.


Next Story