முல்லை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

நாமக்கல்லில் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்து இருப்பதால் முல்லை பூ நேற்று கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் வரத்து குறைவு
நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் சுமார் 2 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வரும். இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
ஆனால் சமீப காலமாக நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் நிலவி வரும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து சற்று குறைந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.700-க்கும், முல்லை பூக்கள் கிலோ ரூ.1,000-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
விலை குறைய வாய்ப்பு
இதேபோல் சம்பங்கி கிலோ ரூ.120-க்கும், அரளி ரூ.200-க்கும் விற்பனையானது. பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து சற்று குறைந்து இருப்பதாலும், முகூர்த்தநாள் என்பதால் தேவை அதிகரித்து இருப்பதாலும் பூக்களின் விலை அதிகரித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனிவரும் காலங்களில் பூக்கள் உற்பத்தி அதிகரித்து விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.






