தீபாவளி பண்டிகைக்காக தரைக்கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்


தீபாவளி பண்டிகைக்காக தரைக்கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 22 Oct 2023 7:45 PM GMT (Updated: 22 Oct 2023 7:45 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தரைக்கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் வெளியூர் வியாபாரிகளும் தற்போது வந்து குவியத்தொடங்கி விட்டனர்.

தஞ்சாவூர்

தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை அடுத்தமாதம் (நவம்பர்) 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுகள் தான் ஞாபகத்திற்கு வரும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவார்கள். பின்னர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதனால் தீபாவளிக்கு 1 மாதத்திற்கு முன்பே புத்தாடைகள் வாங்குவதற்காக கடைகளை நோக்கி மக்கள் செல்வார்கள்.

தஞ்சை மாநகரில் தீபாவளி விற்பனை களை கட்ட தொடங்கி இருக்கிறது. இதனால் தஞ்சை காந்திஜிசாலை, கீழவாசல் செல்லும் சாலையில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் அதிகஅளவில் வர தொடங்கி உள்ளனர். தஞ்சை மட்டுமின்றி தஞ்சையை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர். அதிலும் தற்போது விடுமுறை தினம் என்பதால் இப்போது துணி வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

தற்காலிக தரைக்கடைகள்

ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி சாலையோரங்களில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்கப்பட்டு, புத்தாடைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் அண்ணாசாலை பகுதியில் சாலையோரம் தற்காலிக தரைக்கடைகள் புதிதாக முளைக்க தொடங்கி உள்ளன. இங்கு சிறுவர்களுக்கான துணிகள் அதிகஅளவில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடல் பகுதியில் தரைக்கடைகள் அமைப்பதற்காக தகரத்தால் ஆன கொட்டகை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் காந்திஜிசாலை, தெற்குஅலங்கம், தெற்குவீதி, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும் தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது வெளியூர்களில் இருந்து தரைக்கடை வியாபாரிகளும் அதிக அளவில் தஞ்சைக்கு வந்து குவியத்தொடங்கி விட்டனர்.


Next Story